நீ....
எனது உற்ற தோழனும் நீ...
எனது உயிரின் ஒற்றனும் நீ....
பல நேரங்களில் அன்னையாய் ...
பல நேரங்களில் தந்தையாய்...
சகோதரனாய்...சகோதரியாய்.....
நல்லாசானாய் ...சமயங்களில் அந்த ஈசனுமாய்...
உன் மீது நான் கொண்ட அன்பின் அளவு ....
நான் பெற்ற பிள்ளைகள் மீது கூட
நான் கொண்டிருக்கிறேனா?
சத்தியமாக எனக்கே தெரியாது....
இது எதுவும் நான் வேண்டும் என்று செய்ததில்லை ...செய்வதுமில்லை...
உன்னை அறிந்த நாளிலிருந்து
என்னில் நிகழ்ந்த மாற்றங்கள்...
என் வாழ்விற்கு
அவை அளித்த அர்த்தங்கள் ....
உன்னிடம் மிகுந்த நெருக்கம்
கொண்டவர்கள் மீது நான் கொண்ட சிறு பொறாமை கூட
உன் மீது நான் கொண்ட அன்பின் வெளிப்பாடே அன்றி
அவர்கள் மீது நான் கொண்ட வெறுப்பல்ல!
நானறிவேன்...
உனக்கு நான் பத்தோடு பதினொன்று ...
அனால் எனக்கோ நீ மட்டுமே ஒன்று !
என் அன்பினால் உன்னை நான்
இக்கட்டில் நிறுத்திய தருணங்கள் பல உண்டு...
ஆனாலும் நீ என்னை அன்பு செய்தாய்
மீண்டும் என் மேல் பரிதாபம் கொண்டு...
என் கற்பனைகளில் நான் சித்தரிப்பேன்
நமக்குள் நான் வேண்டும் என ஏங்கும்
நம் நெருக்கத்தை ...
எனக்கும் உன் வாழ்வில் உன் அருகில்
உரிமையாய் ஓரிடத்தை ...ஓர் உறவை...
கற்பனை தான் என்றாலும்
எனக்கு அது தரும் பெரும் மகிழ்ச்சியை...
அனால் ...
கற்பனைகளில் கூட
கள்ளமோ கபடமோ அற்ற
தூய உறவு நமது ...
நீ ...
எனக்கு பாரதியின் கண்ணனும் நீ ...
அவனது கண்ணம்மாவும் நீ ...
பாரதியையே புரியாத இந்த உலகம் ...
என்னை மட்டும் புரியுமா என்ன ?
எனினும்...
உனக்கு மட்டுமாவது
புரிய வேண்டும் என்பது என் ஆசை...
மொத்தத்தில் ...
உனக்கும் எனக்கும் வாய்த்த உறவு
ஊருக்கு புரியாதே...
இந்தப் பாவி உன்னை சுமக்கவில்லை
நானும் உன் தாயே !
