Tuesday, May 26, 2026

மௌனம் எனும் மொழி!

இந்தப் பிரபஞ்சத்தில்

எல்லா உணர்வுகளுக்கும்

பெயர் சூட்ட முடியாது!

சில வேளைகளில்

காரணமின்றி ஒரு பாரம்

இதயத்தில் தங்கிவிடும்;

சில நேரங்களில்

கண்கள் பனித்தாலும்

அழுகை பிறக்காது!

ஒரு பாடலின் வரியில்,

மழைத்துளியின் ஒலியில்,

பழைய நினைவின் வாசனையில் 

இதயத்தின் ஓரத்தில் ஓர் 

மெல்லிய அதிர்வு எழும்!

அதை சொல்ல முயன்றால் தான் தெரியும்..

அந்த உணர்வை வர்ணிக்க

வார்த்தைகள் இல்லை என்பது!

சில நேரங்களில் வார்த்தைகள்

நாம் சொல்ல வருவதைச் சுருக்கி

அதன் ஆழத்தை இழக்கச் செய்கின்றன!

“எனக்கு வலிக்கிறது” என்றால்

அந்த வலியின் ஆழம்

யாருக்கும் எட்டாது!

“நான் உன்னை நேசிக்கிறேன்” என்றால்

அந்த அன்பின் தீவிரம்

முழுமை பெறாது!

சில உணர்வுகள்

மௌனத்தில் தான்

அழகையும், புனிதத்தையும் 

பெறுகின்றன!

அவை சொற்களாகும் போது

அதன் உயிர்

மெல்ல மெல்ல தேய்கிறது.

விவரிக்க முடியாத தவிப்பும்...

சொல்ல முடியாத ஏக்கமும்...

அதுவே,

நம்மை மனிதனாக்குகிறது.

யாருக்காகவோ காத்திருக்கும்

அந்த இனிய வலியும் ,

பிரிவின் வெற்றிடமும்,

காரணமற்ற தனிமையும்,

அவற்றை விளக்க முயல்வதை விட

உணர்வதே சுகம்!

எல்லாவற்றையும்

புரிய வைக்க வேண்டியதில்லை;

சில உணர்வுகள்

நமக்கும்

நம்முடைய அந்தரங்கத்திற்கும்

மட்டுமே சொந்தமானவை!

அந்த மௌனத்தைப் 

புரிந்துகொள்ளும் ஒரு இதயம்  

கிடைத்தால்,

அங்கே

வார்த்தைகளுக்கு

வேலையே இல்லை!

நம்பிக்கை

 


கடந்த இரண்டு ஆண்டுகள்...

காலண்டரில் தேதிகள் மாறினாலும்,

எங்கள் வாழ்க்கையில்

மாறியது மருத்துவமனை வாசல்களும் , 

அறைகளும், மருத்துவர்களும் தான்!

வெள்ளைச் சுவர்களின் நடுவில்

எங்கள் நாட்கள் அடைபட்டுப் போயின!

மருந்தின் வாசனையில்

நம்பிக்கையும் சோர்வும்

ஒற்றை மூச்சாய் நின்று போயின!

வலிகள் மட்டும்

எங்களை விட்டுப் போகாமல் 

பிடிவாதத்துடன் !

ஒரு காலத்தில் இயல்பான சிரிப்பு...

இன்றோ பெரும் முயற்சியாக ...

முயல்வதே அயர்ச்சியாகவும்!

எதுவும் பிடிக்கவில்லை..

எதிலும் மனம் நிலைக்கவில்லை...

உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்க,

நாங்கள் மட்டும்

நேரம் நின்று விட்ட 

 ஒரு மூலையில் சிக்கியபடி....

சில நேரங்களில்

எல்லாவற்றையும் விடுத்த

ஓர் நீண்ட தூக்கத்திற்கு

மனம் ஏங்குகிறது!

சொல்ல வார்த்தைகள் இருந்தும்

கேட்க யாருமில்லாத அமைதி... 

மௌனத்தையும்புரிந்து கொள்ள

ஒரு இதயம் தேடுகிறது!

இது எல்லாம் முடிந்தால் போதும்

என்று ஒரு சின்ன குரல்

உள்ளுக்குள் எழுந்தாலும்,

மற்றோர் குரல்

இது முடிவல்ல…

இன்னும் விடியல் இருக்கிறது

என்று நம்பிக்கையின் விளிம்பில்

ஊசலாடுகிறது!

ஒரு நாள்..

இந்த வெள்ளைச் சுவர்கள் நினைவாகி,

இந்த வலிகள் கதையாகி,

நாம் மீண்டும்

வாழ்க்கையை உணரக் 

 கற்றுக்கொள்வோம்!

அந்த நாளுக்காக ,

நான் இங்கேயே நிற்கிறேன்...

மூச்சு விடுகிறேன்…

சிரிக்க முயல்கிறேன்...

சற்றே உடைந்திருந்தாலும்,

நம்பிக்கை எனும் உளியோடு 

காத்திருக்கிறேன்!

பிறந்த நாள் வாழ்த்துகள்

 

என் முதல் காதலுக்கு

ஐம்பதாவது பிறந்த நாள்!

காலம்

அவன் நெற்றியில் சில வெள்ளிக் கோடுகளை வரைந்திருந்தாலும்,

என் மனதின் தோட்டத்தில்,

அவன் இன்னும்

மழையில் நனைந்த அந்தச் சிறுவனாகவே இருக்கிறான்!

என் அத்தை மகன் அவன்…

ஆனால் உறவுகளின் பெயர் தெரியும் முன்பே...

எங்கள் ஆன்மாக்கள்

ஒருவரை ஒருவர் அறிந்திருந்தன!

சிறு வயதில்...மாலைகளில்...

ஒரே மொட்டை மாடியில்

நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள்…

ஒரே காற்றில் சிரித்து...

ஒரே தூறலில் நனைந்து...

ஒரே பாடலில் கரைந்து...

ஒரே அமைதியில் அழுத காலங்கள்…

அவன் கண்களில்

சிறு மேகம் வந்தால்...

என் இதயத்தில் மின்னல் வெட்டும்!

நான் பேசாமல் மௌனம் காத்தால்...

என் வலியை அவன் உணர்ந்து விடுவான்!

என் மூச்சின் வேகத்தில் கூட...

அவனது நிதானம் வீசும்!

அவ்வளவு ஆழமான புரிதல்…

வார்த்தைகள் தேவையில்லாத அன்பு…

இரண்டு உடல்களில் துடித்த

ஒரே உயிர் போல…

எங்கள் இருவரின் விழிகளும்

கண்ட ஒரே கனவு...

ஓர்நாள் ...

ஒரே வீட்டின் வாசலில்..

மாலைத் தேநீர் குடித்தபடி..

இயற்கையை ரசிக்கும்...

ஓர் முதிர்ந்த தம்பதிகளாக...

நாங்கள் இருவரும்!

ஆனால்

வாழ்க்கை எல்லா காதல்களுக்கும்

அழகிய முடிவை எழுதுவதில்லை!

சிலரின் சூழ்ச்சிகள்…

சில காலங்களின் கொடூரம்…

சில குடும்பங்களின் கட்டாயங்கள்…

எங்கள் கைகளை மெதுவாகப் பிரித்துவிட்டது!

நான்

வேறு ஒருவரின் வாழ்க்கையாகிவிட்டேன்…

அவன்

வேறு ஒருத்தியின் உலகமாகிவிட்டான்…

இன்று

எங்களிருவருக்கும்

அழகான குழந்தைகள் உண்டு…

அன்பு நிறைந்த வாழ்க்கைத்துணைகள் உண்டு…

வெளியில் பார்க்கும் போது...

எல்லாமே நிறைவாகத்தான் !

ஆனால்

இதயத்தின் மிக ஆழத்தில்

யாரும் திறக்காத ஒரு அறை இருக்கிறது…

அங்கே இன்னும்

எங்கள் காதல் ஆசனமிட்டு அமர்ந்திருக்கிறது...

மறக்க முடியாத புனிதமாக!

நாங்கள் பிரிந்த நாள்

மௌனமாக அழுகிறது!

ஆறாத ரணமாக !

இன்று வரை...

எங்கள் அன்பு...

எந்த எல்லையையும் மீறவில்லை!

ஆனால் அதன் ஆழமும் மாறவில்லை!

மாறாக..

தொலைவில் நின்றபடியே..

ஒருவரின் நலனுக்காக...

மற்றொருவர் தினமும் பிரார்த்திக்கும்

அமைதியான தேவதையாக மாறிவிட்டது!

அவன் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்…

அவன் மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்…

அவன் வாழ்வு

மழைக்குப் பிறகான நிலம் போல

என்றும் பசுமையாக இருக்க வேண்டும்…

என்று

என் இரவுகள் இன்னும்

இறைவனிடம் மெதுவாக வேண்டிக்கொள்கின்றன!

ஏனெனில்,

சில காதல்கள்

கணவன் மனைவியாக முடியாமல் போனாலும்,

ஒரு வாழ்நாள் முழுவதும்

மனதின் உள்ளார்ந்த பிரார்த்தனையாகவே

தொடர்ந்து வாழ்கின்றன!

எங்கள் காதலைப் போல!


பட்டமளிப்பு!

 ஏடுகளின் கல்வி முடித்து

 இன்று,பட்டமளிப்பு மேடையில்

 பாங்காய் நிற்கிறாய்!

நாட்டியப் பேரொளியாய் மேடையில் நீ ஆட, பாட்டிலும் உன் நடிப்பிலும் அன்னையின் நெஞ்சம் கூத்தாட,

கலைமகளாய் கவின்மிகுந்து திகழும் என் தலைமகளே!

கலைநயம் கொண்ட உன் திறமைகளை விஞ்சிடும் உன் வெண்மலர் நெஞ்சம்! 

பொறுப்பும் பாசமும் பொதிந்த நற்குடிமகளாய்,

அன்பான அக்காவாய், 

அருமையான மகளாய்,

அனைவரிடமும் நீ காட்டும் அன்பே உனது அழகு!

உன்னை மகளாய் பெற்றெடுத்த பேறுகண்டு,

என் அன்னை நெஞ்சம் அடையும் பெருமிதம் கோடி!

கண்ணின் மணியாய் உன்னை வளர்த்து,

மண்ணில் உனக்காய் வாழ்ந்து மறைந்த,

தாத்தா பாட்டியின் ஆருயிர்ச் சுடரே !

இறைவன் உனக்குத் தந்த

 கலைகளெல்லாம் இன்னும் சிறந்து  

உன் வாழ்வு ஒளிரட்டும்!

உன் ஆசைகள் யாவும் நிறைவேறி, 

உன் எதிர்காலம் வசந்தமாய் மிளிரட்டும்!

நடிப்பிலும் பாட்டிலும் நயம் கூட்டி,

அனைவர் மனதிலும் நாட்டியம் ஆடும் வண்ண மயில் நீ!

உன்னை மகளாகப் பெற்றதற்கு 

ஒவ்வொரு நாளும் பெருமை கொள்வேன்!

இறைவன் அளித்த அருட்கொடைக்கு, 

நான் வாழும் நாள்

 வரை நன்றி சொல்வேன்!


அம்மா....

 அம்மா...

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து

பத்தொன்பது ஆண்டுகள் ஆகிறது…

ஆனால் என் மனம் மட்டும்

இன்னும் உன் மடியில்தான் வாழ்கிறது…

காலங்கள் நகர்ந்துவிட்டன..

வீடுகள் மாறிவிட்டன...

வாழ்க்கைப் பல முகங்களைக் காட்டிவிட்டது...

ஆனால்

பவா என்று

அன்பு உருக அழைத்த உன் குரலை

என் உள்ளம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது!

நான் தவறு செய்த நாட்களிலும் கூட

என்னைத் தண்டிக்காமல்,

என் கண்ணீரைத் துடைத்து 

அன்பினால் என்னைத் திருத்திய 

தேவதை நீ!

உன் கோபத்திற்குக் கூட

கருணையின் வாசனை இருந்தது அம்மா!

நான் உடைந்து போகாமல் இருக்க

உன் இதயத்தையே மெத்தையாக விரித்தவள் நீ!

உன் கைகளால் சமைத்துப் பரிமாறிய உணவுகளில்,

சுவை மட்டும் இல்லை…

அன்பும் பாசமும் நேசமும் இருந்தது!

சோர்ந்து போன ஆன்மாவைக் கூட 

மீண்டும் உயிர்ப்பிக்கும்

தாயன்பின் தூய மணம் இருந்தது!

நடனத்தை நான் ரசிக்கக் கற்றது

உன் கண்களின் வாயிலாக!

தமிழை நான் காதலிக்கத் துவங்கியது

உன் வார்த்தைகளின் வழியாக!

என் காதலின் இரகசியங்களுக்குக் கூட

நீ தான் முதல் தோழி!

என் இதயத்தின் கதவுகளை

முழுமையாகத் திறந்து பார்த்து 

முற்றிலுமாக என்னை அறிந்த 

ஒரே ஜீவன் நீ!

என் கணவருக்கும்

உனக்கும் இருந்த அந்த அழகிய நட்பு..

உங்கள் இருவரின் பார்வை பரிமாற்றம்...

நான் சிறிதும் பொறாமைப் படாத

அழகிய காதல் கதை!

உன் உயிரின் இறுதி ஒளிவரை

உன்னை இந்த உலகில் பிடித்துவைத்த

ஓர் பிணைப்பு...

உனக்கு நான் அளித்த ஒரே பரிசு...

என் மகள்!

அவள் சாப்பிடும் வரை

நீ உணவைத் தொட மாட்டாய்!

அத்தனை வலி வேதனைகளிலும் 

உன் கண்களில் படரும் ஒளி

அவளுக்காகவே!

சிறு சிறு சந்தோஷங்களில் கூட

பேரானந்தம் கண்ட

அல்ப சந்தோஷி நீ…

மழை வாசனையில் மகிழ்ந்தாய்…

குழந்தையின் சிரிப்பில் கரைந்தாய்…

ஒரு பூவின் மலர்ச்சியிலும் கூட

வாழ்க்கையின் அர்த்தம் கண்டாய்…

அதனால் தான் அம்மா…

உன்னைச் சந்தித்தவர்கள் யாரும்

உன்னை மறக்கவே இல்லை!

உன்னுடன் பழகிய யாரும்

உன்னை வெறுக்கவே இல்லை!

உன் அன்பு

அவர்களின் நினைவுகளில்

இன்றும் அணையா விளக்காய் !

ஆனால் அந்தக் கொடியகேன்சர்…

உன் உடலை மெதுவாக வதைத்தது…

நீ சிரித்துக்கொண்டே வலியை மறைத்த நாட்கள்

இன்றும் என் இதயத்தை நொறுக்குகின்றன…

மரணம் கூட

இவ்வளவு அழகான ஒரு ஆன்மாவை

எப்படி எடுத்துச் சென்றது என்று

இன்றுவரை எனக்குப் புரியவில்லை…இன்றும் பல இரவுகளில்

உன் மடியைத் தேடும் என் மனம்!

என் தலைமுடியை வருடும் 

உன் விரல்களுக்காக

ஏங்கும் என் உயிர்!

பத்தொன்பது ஆண்டுகள் கடந்தும்

உன் பிரிவு மட்டும்

என் உள்ளத்தில் ஆறாத் துயராக!

அம்மா,

சில உறவுகள்

இறப்பால் முடிவதில்லை…

அவை

நம் நினைவுகளின் ஒவ்வொரு மூலையிலும்,

நம் கண்ணீரின் உப்பிலும்,

நம் ஒவ்வொரு அசைவிலும் ,

நிழலாய் வாழ்ந்து கொண்டே இருக்கும்!

நீயும் அப்படித்தான்…

என் வாழ்வில் மறைந்தவள் அல்ல...

என் உயிரோடு கலந்த

நித்தியமான அன்பு!

அம்மா இறப்பதில்லை...

நம் நினை

வுகளின் ஊடே...

நம் மூச்சின் உள்ளே ...

நம் பிள்ளைகளின் வழியே...

வாழ்ந்து கொண்டே இருப்பாள்!


விடியல்

 சில வலிகளுக்கு

மருந்தே இருக்காது…

அவை மெதுவாக

மனதின் சுவர்களில் பூஞ்சைப் போலப் பரவி,

ஒரு நாளில் நம்மையே அந்நியமாக்கி விடும்.

சிரிக்கிறேன்...

ஆனால் அந்தச் சிரிப்புக்குள்

சிதறிக் கிடக்கிறது

நூறு அமைதியான அழுகைகள்.

"நான் சோர்ந்து விட்டேன்"

என்று சொல்லத் தோன்றும்.

ஆனால் யாரிடமும் சொல்ல முடியாது.

ஏனெனில்

இந்த உலகம்

கண்ணீரைக் கேட்கும் முன்

காரணத்தைக் கேட்கிறது.

சோர்வுக்குக் கூட

ஒரு எடை இருக்கிறது போல

அதைத் தூக்கிக்கொண்டு

நாட்களைக் கடப்பது 

சில நேரம் மிகவும் கடினம்.

ஒவ்வொரு இரவும்

ஒரு போர்க்களம் போல;

கண்களை மூடினால் நினைவுகள்,

திறந்தால் பயங்கள்.

தூக்கம் கூட

என்னைத் தவிர்த்துப் போகிறது!

இந்த இதயம்

எவ்வளவு தாங்கும் என்று தெரியவில்லை,

ஒவ்வொரு நாளும்

உடைந்து கொண்டே இருக்கிறது.

ஆனால்

அந்த உடைதலின் சத்தம் மட்டும்

வெளியே கேட்கவே இல்லை!

எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள்...

நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று.

ஆனால்

என் உள்ளே இருந்த

நான்

என்றோ இறந்து விட்டேன்!

சில நாட்களில் வாழ்க்கை 

ஒரு நீண்ட மழைக்காலம்போலத் தோன்றுகிறது…

நின்று விடாத சத்தங்கள்,

முடிந்து விடாத கவலைகள்,

யாரும் கேட்காத அமைதியான அழுகைகள்.

"இன்னும் எவ்வளவு தூரம்?"

மனம் மெதுவாகக் கேட்கும்.

“ஏன் இவ்வளவு போராட்டம்?”

என்று இரவு முழுக்க விழித்திருக்கும்.

சில சமயம்

நிரந்தரமான ஒரு தூக்கம் மட்டும் வேண்டும் போலத் தோன்றும்…

எந்த நினைவும் வராத,

எந்த வலியும் எட்டாத,

எந்த நாளையும் எதிர்கொள்ள வேண்டாத

ஒரு நீண்ட அமைதி.

ஆனால்...

இந்த அளவுக்கு வலித்துக் கொண்டிருக்கும் இதயம் கூட

ஒரு சிறிய ஒளிக்காகத்தான்

இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது போல…

அதனால்தான்

முழுவதும் இருள் ஆன பிறகும்

இன்னும்

விடியல் வரும் என்று

அமைதியாகக் காத்திருக்கிறது!



கனவு!

 

ஒரு பெண்ணின்

நிசப்தமான இரவுகளில்

தலையணை மட்டும் அறிந்திருக்கும் ரகசியம்

தனிமையின் பயமல்ல…

தன்னையே தொலைத்து விடக்கூடாதென்ற

மௌனப் பிரார்த்தனை.

ஒருகாலத்தில்

அவள் அஞ்சியது 

கனவுகளை மடித்து

பழைய சேலைகள் நடுவே

அலமாரியின் இருளில் வைக்க நேருமோ என்று.

ஆனால் இன்றைய பெண்

கனவுகளை மடிக்கக் கற்றுக்கொள்ளவில்லை;

அவற்றுக்குச் சிறகுகள் தைத்து

வானத்தில் விடக் கற்றுக்கொண்டாள்!

அதே பழைய சேலையின் நுனியில் கூட

புதிய விடியலின் நிறங்களைத் தைத்து அணிகிறாள்!

காதல் இல்லாத வீட்டின்

கடமைகளின் சலசலப்புக்குள்

தன் சிரிப்பு கரைந்து போகாமல்,

அதே சிரிப்பால்

வீட்டையே வசந்தமாக்கக் கற்றுக்கொண்டாள்!

குழந்தைகளின் நாளைகளைக் 

கைகளில் தாலாட்டிக்கொண்டிருந்தாலும்,

தன் கனவுகளையும்

இதயத்தின் ஆழத்தில்

தீப் பொறியாக்கிக் கொண்டாள்!

அனைவருக்கும் எல்லாமாக இருப்பவள்

தனக்காகவும் தானே

திறம்பட இருக்கிறாள்!

சமையலறை வாசத்திலும்

அழுகையை மறைத்த சிரிப்புகளிலும்

தன்னையே தான் செதுக்கிக் கொண்டாள்!ஒருநாள் கண்ணாடி முன் நின்று

“இவள் யார்?” என்று

தவிப்பதில்லை...

“இவள்தான் நான்” என்று

தலை நிமிர்ந்து தன்னைத் தானே

ரசித்துக் கொள்வாள்!

பெண்கள் விரும்புவது

வெறும் திருமணம் அல்ல…

உயிர் முழுதும் மலரச் செய்யும் வாழ்க்கை.

அவர்கள் தேடுவது

வெறும் பாதுகாப்பல்ல…

சிறகுகளை மடிக்கச் சொல்லாத அன்பை!

அவர்கள் வேண்டுவது

பொன் கூண்டல்ல…

மழையையும், காற்றையும், சுதந்திரத்தையும் தழுவி

தாங்களே தேர்ந்தெடுக்கும் ,

விரிந்து பரந்த வானை!

இன்றைய பெண்களின் மிகப் பெரிய பயம்

மறைந்து போவதல்ல…

தங்களை மறந்துவிடுவதே!

அதனால் தான்

இப்போது அவர்கள் விரும்புவது

மற்றவர்கள் எழுதிய கதையில்

ஒரு பாத்திரமா

வதைஅல்ல…

தங்கள் உயிரின் மொழியில்

தாங்களே ஒரு காவியமாவதை!

அச்சம்

 


ஒரு பெண்ணின் 

அமைதியான இரவுகளில்

அவள் இதயத்துக்குள் மட்டுமே எட்டிப்பார்க்கும் அச்சம்

தனிமை அல்ல...

ஒருநாள்

தன் கனவுகளை எல்லாம்

மடித்துப் பழைய சேலையோடு சேர்த்து அலமாரிக்குள் வைத்துவிட நேருமோ என்று...

காதல் இல்லாத ஒரு வீட்டில்

கடமைகளின் சத்தத்துக்குள்

தன் சிரிப்பை மெதுவாக இழந்துவிட நேருமோ என்று....

குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் கைகளில்

தன் எதிர்காலமே கரைந்து போய்விடுமோ என்று....

அனைவருக்கும் எல்லாமாக இருந்தபின்

தனக்காக மட்டும்

யாருமில்லாத வெறுமை வந்து 

அமருமோ என்று...

சமையலறை வாசத்திலும் 

அழுகையை மறைத்த சிரிப்புகளிலும்

தன் இளமையைச் சாம்பலாக்கிவிட்டு

ஒருநாள் கண்ணாடி முன் நின்று 

“இவள் யார்?”

என்று தன்னையே அடையாளம் காண முற்பட நேருமோ என்று...

பெண்கள் விரும்புவது

வெறும் திருமணம் அல்ல…

மெய்யான உயிர் திளைக்கும் வாழ்வை!

அவர்கள் தேடுவது

வெறும் பாதுகாப்பல்ல…

தங்களை இழக்காத அன்பை!

அவர்கள் வேண்டுவது 

ஒரு பொன் கூண்டல்ல ...

பறந்து விரிந்த வானை!

இன்றைய பெண்களின் மிகப் பெரிய அச்சம்....தனிமை அல்ல!

தன்னையே மெதுவாகப் புதைத்துக்கொண்டு

மற்றவர்கள் எழுதிய கதையில்

ஒரு பாத்திரமாய் வாழ்ந்து மறைந்து போவதுதான்!