ஏடுகளின் கல்வி முடித்து
இன்று,பட்டமளிப்பு மேடையில்
பாங்காய் நிற்கிறாய்!
நாட்டியப் பேரொளியாய் மேடையில் நீ ஆட, பாட்டிலும் உன் நடிப்பிலும் அன்னையின் நெஞ்சம் கூத்தாட,
கலைமகளாய் கவின்மிகுந்து திகழும் என் தலைமகளே!
கலைநயம் கொண்ட உன் திறமைகளை விஞ்சிடும் உன் வெண்மலர் நெஞ்சம்!
பொறுப்பும் பாசமும் பொதிந்த நற்குடிமகளாய்,
அன்பான அக்காவாய்,
அருமையான மகளாய்,
அனைவரிடமும் நீ காட்டும் அன்பே உனது அழகு!
உன்னை மகளாய் பெற்றெடுத்த பேறுகண்டு,
என் அன்னை நெஞ்சம் அடையும் பெருமிதம் கோடி!
கண்ணின் மணியாய் உன்னை வளர்த்து,
மண்ணில் உனக்காய் வாழ்ந்து மறைந்த,
தாத்தா பாட்டியின் ஆருயிர்ச் சுடரே !
இறைவன் உனக்குத் தந்த
கலைகளெல்லாம் இன்னும் சிறந்து
உன் வாழ்வு ஒளிரட்டும்!
உன் ஆசைகள் யாவும் நிறைவேறி,
உன் எதிர்காலம் வசந்தமாய் மிளிரட்டும்!
நடிப்பிலும் பாட்டிலும் நயம் கூட்டி,
அனைவர் மனதிலும் நாட்டியம் ஆடும் வண்ண மயில் நீ!
உன்னை மகளாகப் பெற்றதற்கு
ஒவ்வொரு நாளும் பெருமை கொள்வேன்!
இறைவன் அளித்த அருட்கொடைக்கு,
நான் வாழும் நாள்
வரை நன்றி சொல்வேன்!

No comments:
Post a Comment